Monday, August 1, 2016

நல்ல படைப்பாளிகள் பலர் இன்னும் கவனிக்கப்படாமல் இருக்கிறார்கள்


இலங்கையிலிருந்து வெளிவரும் 'எங்கள் தேசம்' எனும் சமூக, கலை, இலக்கிய இரு வார இதழில், கடந்த ஜூன் 15-30 அன்று பிரசுரமான எனது நேர்காணல் இது. நேர்காணல் செய்திருப்பவர் ஊடகவியலாளர் மற்றும் இலக்கியவாதியான திரு.நஸார் இஜாஸ்.

01.    
உங்களுடைய எழுத்துப் பணியின் பிரவேசம் பற்றி குறிப்பிடுங்கள்?
     அநேகரைப் போலவே அச்சு ஊடகங்களுக்கென எழுதத் தொடங்கியது பாடசாலை உயர்தரம் கற்கும் காலப்பகுதியில்தான். அந்த வயதில் அப்படித்தான் இல்லையா? எல்லோரையும் போல பரீட்சைக்காகக் கற்பதின் உள நெருக்கடியைத் தவிர்க்கவென புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினேன். அந்தக் காலத்தில் இப்போது போல நேரத்தைச் செலவழிக்க கைபேசிகளோ, சமூக வலைத்தளங்களோ எதுவும் இருக்கவில்லை. எனவே நிறைய வாசிக்க நேரம் கிடைக்கும். வாசிப்பவை எழுதத் தூண்டும். எனக்கும் அது அப்படித்தான் ஆயிற்று. பிறகு 'தம்பி, இலக்கியம் ஒரு காலத்திலும் வாழ்க்கைக்கு உதவாது. எதிர்கால வாழ்க்கைக்கு ஒரு நல்ல அத்திரவாரத்தை இட்டதன் பின்னர் எழுதுவதுதான், அனுபவங்களின் முதிர்ச்சியுடனான சிறப்பாக எழுத்தாக அமையும். எனவே முதலில் கற்றலில் கவனத்தைச் செலுத்துங்கள்' என எனது சகோதரி, கவிஞர் ஃபஹீமா ஜஹானிடமிருந்து தக்க சமயத்தில் நல்ல அறிவுரை கிடைத்தது. தொடர்ந்து பல்கலைக்கழகக் கல்வியையும் பூரணப்படுத்தி, தொழிலொன்றும் கிடைத்த பின்னரே மீண்டும் அச்சு இதழ்களில் எழுத ஆரம்பித்தேன். இடைப்பட்ட காலத்தில் எப்போதையும் போல புத்தக வாசிப்பை தொடர்ந்து கொண்டேயிருந்தேன். இவற்றை இங்கே குறிப்பிட இரண்டு காரணங்கள் இருக்கின்றன.

     ஒன்று, இக் காலத்தில் சமூக வலைத்தளங்களில், பதின்பருவ இளைஞர்களால் தமது பாடசாலைக் காலத்தில் எழுதப்படும் அரைகுறை எழுத்துக்கள் பலவற்றைக் காணக் கிடைக்கிறது. அவரின் அறிவுரை இப்போது தமது பாடசாலைக் காலத்தில் எழுதி வரும் பலருக்கும் கூட நிச்சயம் பயன்படும். அடுத்தது, நான் மிகவும் மதிக்கும் 'எங்கள் தேசம்' பத்திரிகையின் மூலமாகவே எனது அடுத்த எழுத்துலகப் பிரவேசம் ஆரம்பித்தமை. 'எங்கள் தேசம்' பத்திரிகையில்தான் மீண்டும் எழுத ஆரம்பித்தேன். அதனாலேயே நீங்கள் நேர்காணலுக்காக அணுகியபோது எனக்கு மறுக்கத் தோன்றவில்லை. 'ஊடகங்களின் நேர்காணல் என்றால் ஓடி மறைந்து கொள்பவன்' என்ற 'நல்ல' பெயர் ஊடக வட்டாரத்தில் எனக்கு உண்டு.


02.    
இளம் வயதிலேயே எழுத்துலகில் கவனிக்கப்படக் கூடிய ஒருவராக உங்களை மாற்றியிருக்கிறீர்களே. அதன் தீவிரத்தன்மை என்ன?
     தீவிரத் தன்மை என குறிப்பிட முடியாது. அது இயல்பாக அமைந்தது. ஒரு பொழுதுபோக்காக, இணையத்தில் எனக்கென வலைத்தளம் உருவாக்கி, ஆரம்பத்தில் 'எங்கள் தேசம்' பத்திரிகையில் எழுதிய கவிதை, சிறுகதை, கட்டுரைகளை, பதிந்து வரத் தொடங்கினேன். அவை சர்வதேசம் முழுவதிலுமிருந்தும் நிறைய வாசகர்களை உருவாக்கித் தந்தன. அவற்றில் கவிதைகளை, இந்திய 'காலச்சுவடு' பதிப்பகம், எனது அனுமதியோடு 'வீழ்தலின் நிழல்' எனும் தலைப்பில் தொகுப்பாகக் கொண்டு வந்தது. அது இப்போது இரண்டு பதிப்புக்களைத் தாண்டி விட்டன. என்னைப் பொறுத்தவரையில், எனது கவிதைகளைப் பொறுத்தவரையில் கவிதைகள் எனப் படுபவை சுய அனுபவப் பதிவுகள் மாத்திரமே. அதற்கீடான அனுபவங்களைக் கொண்டவர்கள் அவற்றை வாசிக்கும்போது, தம்மை அவற்றில் உணர்கின்றனர். இலங்கையைத் தாண்டி, தமிழ் வாசகர்களைக் கொண்ட ஏனைய நாடுகளின் காத்திரமான இணைய, அச்சு ஊடகங்கள் தமது இதழ்களுக்கான படைப்புகளுக்காக என்னை அணுகியபோது என்னால் கொடுக்க முடிந்தது. அவ்வாறான வேண்டுகோள்கள், எனக்குள்ளும் ஏதோ இருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தி பெரிதும் ஊக்கத்தைத் தந்து தொடர்ந்தும் எழுதச் செய்தன. அதுதான் இப்போதும் என்னை இயங்கச் செய்கிறது. நல்ல படைப்புக்களை மாத்திரம் வெளியிடும், காத்திரமான இதழ்களில் படைப்புக்கள் வெளிவந்ததால் நான் கவனிக்கப்படக் கூடிய ஒருவனாக ஆகியிருக்கிறேன். இவ்வாறான இதழ்களில் படைப்புக்களை வெளியிடாமலேயே சிறப்பாக எழுதும், நல்ல படைப்பாளிகள் பலர் இலங்கையில் இன்னும் கவனிக்கப்படாமல் இருக்கிறார்கள்.


03.    
நீங்கள் வெளியிட்டுள்ள நூல்கள் பற்றி குறிப்பிடுங்கள்?

1. '
வீழ்தலின் நிழல்' (கவிதைத் தொகுப்பு, காலச்சுவடு பதிப்பகம்)
2. '
அம்மாவின் ரகசியம்' (மொழிபெயர்ப்பு நாவல், காலச்சுவடு பதிப்பகம்) - இந் நாவல், 2011 இல் வெளிவந்த சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான அரச சாகித்திய இலக்கிய விருதினையும், பணப்பரிசினையும் வென்றது.
3. '
தலைப்பற்ற தாய்நிலம்' (மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுப்பு, எழுநா - நிகரி பதிப்பக வெளியீடு) - கவிஞர் ஃபஹீமாஜஹானுடன் இணைந்து மொழிபெயர்த்த, சிங்களக் கவிஞர் மஞ்சுள வெடிவர்தனவின் சிங்களக் கவிதைகளின் மொழிபெயர்ப்புத் தொகுப்பு.
4. '
கறுப்பு ஜூன் 2014' - இலங்கை முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைகளும் அவற்றுக்கான பின்னணியும்!

     இன்னும் ஆபிரிக்க உலகச் சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு முழுத் தொகுப்பு, ஏழு சிங்களக் கவிஞர்களின் கவிதைகளடங்கிய முழுத்தொகுப்பு, மொழிபெயர்ப்பு நாவல் ஒன்று மற்றும் எனது சிறுகதைத் தொகுப்பு என இவ் வருடம் எனது நான்கு தொகுப்புகள் வெளிவரத் தயாராக உள்ளன. இன்னும் பதிப்பகத்தைத் தேர்ந்தெடுக்கவில்லை. எனது ஏனைய தொகுப்புகள் அனைத்துமே பிற நாடுகளிலிருந்து வெளிவந்ததால் இத் தொகுப்புக்களை இலங்கை பதிப்பகங்களினூடாக வெளியிட உத்தேசித்திருக்கிறேன்.


04.    
நீங்கள் மொழிபெயர்ப்புத் துறையில் அதிக ஈடுபாடுகொண்டவர் என்பதை யாவரும் அறிந்ததே. உங்களுடைய மொழிபெயர்ப்பு ஈடுபாடுகள் குறித்து?
     எழுத வர முன்பிருந்தே சிங்கள, ஆங்கில நூல்களை வாசிப்பேன். பிற மொழி நூல்களை வாசிக்கும்போது, என்னை மிகவும் ஈர்த்த கவிதையை, சிறுகதையை, கட்டுரையை சகோதரி ஃபஹீமாஜஹானோடு பகிர்ந்து கொள்வேன். அதைப் பற்றி இருவரும் கலந்துரையாடுவோம். அவரும் அவ்வாறுதான். தமிழ் வாசக உலகுக்கு வராத, அற்புதமான சிங்களப் படைப்புக்கள் பல உள்ளன. சிங்களம் எனும் மொழி, இலங்கைத் தீவுக்கு மாத்திரமே உரித்தான பிரத்தியேகமான, சிறந்த அழகான மொழி. அதிலுள்ள நல்ல பல படைப்பாளிகள், சமூகத்தின் அடித்தட்டு வாழ்க்கையிலிருந்து வந்தவர்கள். எனவே அவர்களது அனுபவப் பிரதியீடுகளுடனான படைப்புகள் மிகவும் சிறந்து விளங்குகின்றன. ஒரு நல்ல படைப்பை, திரைப்படத்தை, கலையை நீங்கள் காண நேரும்போது, அதைப் பற்றி உங்கள் நண்பரிடத்தில் கதைப்பீர்கள் இல்லையா? அப்படித்தான், தமிழ் வாசகர்களிடத்தில் அவ்வாறான நல்ல படைப்புகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஆவல் உந்தவே, மொழிபெயர்க்க ஆரம்பித்தோம்.


05.    
இன்றைய கால இலக்கியவாதிகளிடையேயும் ஒருவித அரசியல் போக்கு காணப்படுகின்றதே. அது ஆரோக்கியமானதா? அது பற்றிய உங்களுடைய அபிப்பிராயம்?
     உண்மையான, தமது திறமையை மாத்திரம் நம்பி எழுதியும், இயங்கியும் வரும் இலக்கியவாதிகளிடையே இவ்வாறான அரசியல்போக்கு ஏற்படச் சாத்தியமில்லை. இலக்கியவாதிகள் எனத் தம்மைச் சொல்லிக் கொள்ளும் போலிகள், கவன ஈர்ப்புக்காகவும், பிரபல்யத்துக்காகவும் இலக்கியத்தில் அரசியல்போக்கை நுழைத்திருக்கிறார்கள். இது இலக்கியத்துக்கு நிச்சயமாக ஆரோக்கியமானதல்ல. சில வருடங்களுக்கு முன்னர் ஒரு பழக்கம் இருந்தது. வாசகர்களிடையே தமது எழுத்து பேசப்பட வேண்டும் என்பதற்காக ஆபாசத்தை வலியத் திணித்து எழுதும் போக்கு, அப்போது எழுத வந்த சிலரிடம் காணப்பட்டது. அதை எல்லோரும் பின்பற்றப் போய், தமிழ் இலக்கியம் என்றாலே ஆபாச இலக்கியம் என பிற மொழியில் எழுதுபவர்கள் கருதும் அளவுக்கு கொண்டு வந்து விட்டார்கள். இப்போது அடுத்ததைத் தொடங்கியிருக்கிறார்கள். தமக்குப் பிடித்த எழுத்தாளர் ஒருவரைப் பிடித்துக் கொண்டு, அவரை உதாரணமாக வைத்துக் கொண்டு ஏனைய எழுத்தாளர்களை கேலி செய்யும் போக்கு, இப்போதைய இளம் தலைமுறை எழுத்தாளர்களைப் பிடித்துக் கொண்டு ஆட்டுகிறது. இதில் இரண்டு சாராருக்கும் ஏற்படும் சண்டைகளை சமூக வலைத் தளங்களில் நேரடியாகக் காணக் கூடியதாக இருக்கிறது. தம்மால் பிறர் சண்டையிட்டு அடித்துக் கொள்கிறார்களே என்ற பதைபதைப்பு துளியும் இன்றி, அரசியல்வாதிகள் தமது அடிமை குண்டர்களை ஏவி விடுவதைப் போல, இந்தப் பிரதான எழுத்தாளர்களும் இளைஞர்களை உசுப்பேற்றி விடுவதையே செய்துவருகிறார்கள். அவர்கள் செய்வதைச் செய்யட்டும். நமது இளம் தலைமுறையினருக்கு புத்தி எங்கே போய்விட்டது? போலி இலக்கியவாதிகளுக்காக தமது நேரத்தை வீணடித்து, ஆளுக்காள் சண்டை பிடித்துக் கொள்ளும் இளைஞர்கள் தமது குடும்பத்துக்காக, தமது எதிர்காலத்துக்காக அந் நேரத்தைச் செலவிடுவது மாத்திரமே அந்த இளைஞர்களுக்கு பயனுள்ளதாக அமையும். இலக்கியத்தை எவரும் போரிட்டுப் பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை. திறமையுள்ளவர்களால், இலக்கியமானது என்றும் அழியாது அதன் பாட்டில் வாழ்ந்து கொண்டேயிருக்கும்.

*********
 நன்றி - திரு.நஸார் இஜாஸ், 'எங்கள் தேசம்' இதழ்


Wednesday, April 15, 2015

வழித்தடம் உரைக்கும் எமது மொழிபெயர் உலகினுள் !



தமிழ், ஒரு வாசனையைப் போல உலகம் முழுவதும் பரந்துள்ள மொழியாகவிருக்கிறது. உலகிலுள்ள எல்லா தேசங்களிலும் ஏதோவொரு மூலையிலாவது எவராவது ஒருவர் தமிழ் மொழியைப் பேசிக் கொண்டுதான் இருக்கிறார். வரட்சி மிகுந்த மண்ணில் வாழ்ந்து பழகிய ஆபிரிக்க மக்கள், ஏதேனுமொரு செழுமை மிக்க பிற தேசத்துக்கு புலம் பெயர நேருமிடத்து அங்கும் தண்ணீரை மிகச் சிக்கனமாகப் பாவிப்பதைப் போல, தமிழ் மொழியைப் பேசுபவர்களும் தாம் வாழ நேரும் நிலங்களில் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் சிக்கனமாகவேனும் தமிழைப் பேசியும், எழுதியும் அம் மொழியை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

    உலகம் முழுவதுமான தமிழ் மொழியின் பரவலுக்கு, தமிழ் பேசும் மக்களின் புலம்பெயர்தலே காரணமாக இருக்கிறது. தொழிலின் நிமித்தமோ, யுத்தத்தின் பலிகடாக்களாகவோ, வேறு தேவைகளுக்காகவோ தம் பூர்வீக இடங்களை விட்டும் புலம் பெயரும் தமிழ் பேசும் மக்கள் தம் உயிரோடு இரண்டறக் கலந்த மொழியையும் எடுத்துச் செல்கிறார்கள். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் எந்த நாட்டுக்குச் சென்று எம் மொழியைக் கற்றாலும் தமிழ்தான் அவர்களது சிந்தனை மொழியாக இருக்கிறது. 

     பண்டைய காலம் தொட்டு, நம் மூத்த குடிகளின் மொழியான தமிழைப் பேணிப் பாதுகாப்பதில் அவர்களது காப்பியங்களும், இலக்கியங்களும் பெரும்பங்காற்றியிருப்பதை மறுப்பதற்கில்லை. அச் செல்வங்கள் இல்லையெனில், புராண தமிழின் பெருமையைக் கூறும் சான்றுகள் ஏது? எனில், அவற்றைப் பாதுகாத்து இந் நவீன காலத்துக்குக் கொண்டு தந்த அப் பெருந் தகைகளை எவ்வாறு மறத்தலோ, மறுத்தலோ தகும்? 

     அனைத்தும் நாகரிக மயமாகி விட்ட இக் காலத்தில் தமிழ் மொழியின் வரலாறும், இலக்கியங்களும், தமிழ் மொழி மூலமான படைப்புக்களும் உலகம் முழுவதும் பரவி விட்டபோதிலும், வேற்று மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களிடத்தில் தமிழ் மொழி இலக்கியங்களைக் கொண்டு செல்ல வேண்டியது அம் மக்கள் புரிந்து கொள்ளக் கூடிய மொழியிலேயாகும். இந்த இடத்தில்தான் எழுத்தாளர்களுக்கு ஈடாக, அவர்களது படைப்புக்களை ஏனைய மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு செய்பவர்களும், அம் மொழிபெயர்ப்புக்களைத் தொகுத்து உலகம் முழுவதும் வாழும் வேற்று மொழி மானிடருக்குக் கொண்டு சேர்ப்பவர்களும் முக்கியத்துவம் பெறுகிறார்கள். உலகம் போற்றும் அவர்களது செயல் பெரும் மதிப்புக்குரியதாகிறது.

     சர்வதேசமெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்க்கும் நோக்கோடு 2001 ஆம் ஆண்டு பலரது ஆதரவுடன் ஓர் அறக்கட்டளையாகத் தோற்றம் பெற்றதுதான் கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம். இத் தோட்டத்தில் மொழிபெயர்ப்புப் படைப்புக்கள், அரிய தமிழ் நூல்களின் மீள்பதிப்பு, திறமையானவர்களுக்கு விருது வழங்கி ஊக்குவித்தலும், கௌரவித்தலும், இலவச தமிழ் நூல் வினியோகம் எனப் பல விளைச்சல்கள் வெற்றிகரமாக நடந்துகொண்டேயிருக்கின்றன. 

     அவற்றுள் மற்றுமொரு பெறுமதிமிக்க விளைச்சலாக, அண்மையில் காலமான  பேராசிரியர் திரு.செல்வா கனகநாயகம் அவர்களது முயற்சியின் பேரில், கடந்த மூன்று தசாப்தங்களாக உலகம் முழுவதும் வெளிவந்துள்ள தமிழ்க் கவிதைகளில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து, அவற்றை எம்.எல்.தங்கப்பா, அனுஷியா ராமஸ்வாமி, மைதிலி தயாநிதி ஆகியோர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 'In Our Translated World' என 'தமிழ் இலக்கியத் தோட்டம்' ஒரு முழுத் தொகுப்பாகக் கொண்டு வந்துள்ளமையானது, இங்கு பெரிதும் பாராட்டத்தக்கது. 'தமிழ் இலக்கியத் தோட்ட' வெளியீடாக வெளிவந்த இத் தொகுப்பினை வெளியிடும் அனுமதியைப் பின்னர் பெற்ற இந்திய 'விகடன்' பதிப்பகம், இன்னும் பல பிரதிகள் அச்சிட்டு, மலிவு விலையில் பல்லாயிரக்கணக்கான வாசகர்களிடத்தில் கொண்டு சேர்த்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

     கடந்த முப்பது வருடங்களில் தமிழில் பல ஆயிரக்கணக்கான கவிதைகள் அச்சு ஊடகங்களிலும், இணையத்தளங்களிலும் வெளிவந்திருக்கின்றன. அவற்றிலிருந்து சிறந்த கவிதைகளைத் தேர்ந்தெடுப்பதென்பது மிகவும் சிரமமான விடயம் என்பதோடு பரந்த அர்ப்பணிப்பும், உன்னிப்பான கவனமும், கவிதைகள் மீதான வெகுவான ஈடுபாடும் தேவைப்படும் பணியாகவிருக்கிறது. அதை மிகுந்த ஈடுபாட்டோடும் அக்கறையோடும் எழுத்தாளர் திரு.அ.முத்துலிங்கமும் அவரது நண்பர்களும் செய்திருக்கிறார்கள். அவ்வாறு அவர்கள் தேர்ந்தெடுத்த கவிதைகளை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 'தமிழ் இலக்கியத் தோட்டத்துக்காக' தொகுத்த, அதன் நிறுவுனர்களில் ஒருவரான அமரர் திரு. செல்வா கனகநாயகம் கனடா, டொரன்டோ பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பேராசிரியராகக் கடமையாற்றியவர். அத்தோடு மொழிபெயர்ப்பாளர். எனவே, வேறு சில மொழிபெயர்ப்புப் படைப்புக்களை வாசிக்கும்போது எழும் ஐயப்பாடுகளும், குழப்பங்களும், வார்த்தை மயக்கங்களும், பிசகுகளும் இத் தொகுப்பை வாசிக்கும்போது எழவேயில்லை. ஆங்கில மொழிபெயர்ப்போடு, அதன் மூலத் தமிழ்க் கவிதையும் அருகருகே அச்சிடப்பட்டிருப்பதால் தமிழ் வாசகர்களுக்கு கவிதைகளை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.

    எழுத்தாளர்களும், கவிஞர்களும் ஆக்கங்களைப் படைப்பவர்கள் எனில், அப் படைப்புக்களை அவற்றின் மூலத்தோடு எவ்வித மாற்றமும் செய்யாது, இன்னுமொரு மொழிக்கு மொழிபெயர்ப்பவர்கள் அதனை ஒரு தவம் போலவே செய்கிறார்கள். எனவே யதார்த்த வாழ்வியல், யுத்தம், நேசம், துரோகம், இயலாமை, இயற்கை, வன்மம், இழப்பு என மனித வாழ்வில் சந்திக்க நேரும் எல்லாமும் கொண்ட காத்திரமான எழுபத்தெட்டு தமிழ்க் கவிதைகளை, அவற்றின் செறிவும், உள்ளடக்கமும், சாரமும், அழகும் மாறாது இன்னுமொரு மொழிக்கு மாற்றுவதென்பது இலகுவான விடயமாக ஒருபோதும் இருப்பதில்லை.

    கடந்து சென்ற அண்மைய மூன்று தசாப்தங்கள் தமிழ் பேசும் மக்களிடத்தில் இலகுவாக மறக்கப்படக் கூடிய காலகட்டமல்ல. அக் காலகட்டத்துக்குள் வலிகளும், இழப்புக்களும், வேதனைகளும் புதையுண்டு கிடக்கின்றன. எனவே இத் தொகுப்பிலுள்ள இலங்கை மற்றும் புலம்பெயர்ந்தோரின் கவிதைகளில் பல யுத்தத்தின் துயரங்களையும், கண்ணீரையும் எடுத்துரைப்பவை. விடையற்ற வினாக்களாக நம் முன் வைக்கப்படுபவை. இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் கவிதைகள் வாழ்வியல் பிரச்சினைகளின் வெவ்வேறான பரிமாணங்களை சித்தரிப்பவை. எல்லாக் கவிதைகளுமே ஒன்றுக்கொன்று வேறானவை. வெவ்வேறு கோணங்களில் நம் கவனத்தை ஈர்ப்பவை. இவ்வாறாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்துக் கவிதைகளுமே சர்வதேசமும் அறிய வேண்டியவை.
  
   உலகம் சுருங்கிக் கொண்டே வருகிறது. தமிழைப் பூர்வீகமாகக் கொண்ட புதிய தலைமுறைகள் கூட இக் காலத்தில் தம் வேரைப் பிடுங்கி வேற்று மொழிகளிலேயே நட்டு வளர்க்கப்படுகிறார்கள். இதனால் சமூக ரீதியிலும், கலாசார ரீதியிலும் தமிழின் செழுமை அரிதாகும் வாய்ப்பே மிகும். எனவே வரவேற்கத்தக்க இவ்வாறான தொகுப்புக்கள் தொடர்ந்து வெளிவருவதானது காலத்தின் தேவையாக இருக்கிறது. வரவேற்போம் !

- எம்.ரிஷான் ஷெரீப்


நன்றி
 # ஆக்காட்டி கலை இலக்கிய இதழ் - ஜனவரி 2015, மலைகள் இதழ், வல்லமை இதழ், பதிவுகள், தமிழ் எழுத்தாளர்கள், நவீன விருட்சம் இதழ், இனியொரு இதழ்