Wednesday, October 1, 2014

தலைப்பற்ற தாய்நிலம் - ஜூனியர் விகடன் விமர்சனம்

‘கை கால்களால் தமிழர்களின் நெஞ்சங்களைப் பிளந்து

மனதால் மகிழும் இழிவானவர்களின் மத்தியில் நின்று

புத்தனின் வருகை நிகழ்ந்த பூமியிலிருந்து

கவியெழுதும் எனக்கு மோட்சம் கிடைக்கப்பெறுமா அரசனிடமிருந்து?’

என்று துணிச்சலாய் கேட்ட சிங்களக் கவிஞர் மஞ்சுள வெடிவர்தன, இப்போது ஃபிரான்ஸில் வசிக்கிறார். ‘மேரி எனும் மரியா’ என்ற இவரது சிறுகதைத் தொகுப்பு சிங்கள அரசால் 2000-ம் ஆண்டில் தடை செய்யப்பட்டது. ஆனாலும், அச்சம் இல்லாமல் தமிழர் தரப்பு நியாயங்களுக்காக இவரது கவிதைகள் பேசின. இலங்கை அரசால் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டபோது, இலங்கையில் வாழ முடியாமல் வெளியேறினார் மஞ்சுள வெடிவர்தன. சிங்களத்தில் அவர் எழுதிய கவிதைகளை, ஈழத்து தமிழ் இலக்கிய ஆளுமைகளான ஃபஹீமா ஜஹான், எம்.ரிஷான் ஷெரீப் ஆகிய இருவரும் தமிழுக்குக் கொண்டுவந்துள்ளனர்.

”சிங்களர் மூலம் நிகழ்த்தப்பட்ட அடாவடித்தனங்கள் 49 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்களைச் சங்காரம் செய்தவாறு நிறைவடைந்த வேளையில், சிங்களத்தில் கவிதை எழுதுவதைத் தவிர வேறு எதனையும் செய்ய இயலாதிருந்தபோது நான் அதனைச் செய்தேன். தொடர்ந்தும் நான் சிங்களர்களில் ஒருவராக இருப்பதனால் சிங்களவரின் மனச்சாட்சியில் இருந்து விடுபடுவதற்கு என்னால் இயலவில்லை. ஆயினும், இந்தக் கவிதைப் புத்தகத்தைப் பொறுத்தவரை இது சொற்பமான சிங்களர்களின் மனச்சாட்சியின் வெளிப்பாடாகும்” என்று சொல்கிறார் மஞ்சுள வெடிவர்தன. இந்தக் கவிதைகள் சிங்களர்களின் மனச்சாட்சியில் சலனம் ஏற்படுத்தியதா எனத் தெரியாது. ஆனால், தமிழர் கண்ணீர் சிங்களர்களையும் நனைக்கத் தொடங்கியிருக்கிறது என்பதற்கு உதாரணமான எழுத்துக்கள்.

சித்ரவதை செய்யப்பட்டு, பழிவாங்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு மடிந்த தமிழர்களை, கழிவிரக்கத்தோடு பார்த்துக் கண்ணீர் சிந்தக் கூடியவராக மஞ்சுள வெடிவர்தன இல்லை. மனித உரிமை, போர்க்குற்றம், ஐயோ, கடவுளே…. என்று ஈழக் கொடூரத்தை இவர் பார்க்கவில்லை. ஈழ விடுதலையின் உண்மையான அரசியலை உணர்ந்தவராக, அதனை ஆதரிப்பவராக இவரது எழுத்துக்கள் மூலம் புரியவருகிறது. ‘எந்நாளும் யுத்தத் தீ தெற்கிற்கு கண்காட்சிதான்’ என்ற வரியில் அரை நூற்றாண்டு காலத் துன்பங்களை கொட்டிவிடுகிறார்.

அதனால்தான், அதிகாரம் மஞ்சுள வெடிவர்தனவை துரத்துகிறது. ஆனால், அவர் விடாமல் எழுதுகிறார். ‘ஆணியடிக்கப்பட்ட கரமொன்றால் கவிதையெழுதுவது எவ்விதம்?’ என்று கேட்டபடி எழுதியபடி இருக்கிறார்.

- புத்தகன் (ஜுனியர் விகடன் இதழ் - 25.06.2014)

”சிங்களர் மூலம் நிகழ்த்தப்பட்ட அடாவடித்தனங்கள் 49 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்களைச் சங்காரம் செய்தவாறு நிறைவடைந்த வேளையில், சிங்களத்தில் கவிதை எழுதுவதைத் தவிர வேறு எதனையும் செய்ய இயலாதிருந்தபோது நான் அதனைச் செய்தேன். தொடர்ந்தும் நான் சிங்களர்களில் ஒருவராக இருப்பதனால் சிங்களவரின் மனச்சாட்சியில் இருந்து விடுபடுவதற்கு என்னால் இயலவில்லை. ஆயினும், இந்தக் கவிதைப் புத்தகத்தைப் பொறுத்தவரை இது சொற்பமான சிங்களர்களின் மனச்சாட்சியின் வெளிப்பாடாகும்” என்று சொல்கிறார் மஞ்சுள வெடிவர்தன. இந்தக் கவிதைகள் சிங்களர்களின் மனச்சாட்சியில் சலனம் ஏற்படுத்தியதா எனத் தெரியாது. ஆனால், தமிழர் கண்ணீர் சிங்களர்களையும் நனைக்கத் தொடங்கியிருக்கிறது என்பதற்கு உதாரணமான எழுத்துக்கள்.
சித்ரவதை செய்யப்பட்டு, பழிவாங்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு மடிந்த தமிழர்களை, கழிவிரக்கத்தோடு பார்த்துக் கண்ணீர் சிந்தக் கூடியவராக மஞ்சுள வெடிவர்தன இல்லை. மனித உரிமை, போர்க்குற்றம், ஐயோ, கடவுளே…. என்று ஈழக் கொடூரத்தை இவர் பார்க்கவில்லை. ஈழ விடுதலையின் உண்மையான அரசியலை உணர்ந்தவராக, அதனை ஆதரிப்பவராக இவரது எழுத்துக்கள் மூலம் புரியவருகிறது. ‘எந்தாளும் யுத்தத் தீ தெற்கிற்கு கண்காட்சிதான்’ என்ற வரியில் அரை நூற்றாண்டு காலத் துன்பங்களை கொட்டிவிடுகிறார்.
அதனால்தான், அதிகாரம் மஞ்சுள வெடிவர்தனவை துரத்துகிறது. ஆனால், அவர் விடாமல் எழுதுகிறார். ‘ஆணியடிக்கப்பட்ட கரமொன்றால் கவிதையெழுதுவது எவ்விதம்?’ என்று கேட்டபடி எழுதியபடி இருக்கிறார்.
- See more at: http://www.noolulagam.com/2014/06/21/168227/#sthash.kIqpE1hL.dpuf

‘கை கால்களால் தமிழர்களின் நெஞ்சங்களைப் பிளந்து
மனதால் மகிழும் இழிவானவர்களின் மத்தியில் நின்று
புத்தனின் வருகை நிகழ்ந்த பூமியிலிருந்து
- See more at: http://www.noolulagam.com/2014/06/21/168227/#sthash.kIqpE1hL.dpuf
‘கை கால்களால் தமிழர்களின் நெஞ்சங்களைப் பிளந்து
மனதால் மகிழும் இழிவானவர்களின் மத்தியில் நின்று
புத்தனின் வருகை நிகழ்ந்த பூமியிலிருந்து
கவியெழுதும் எனக்கு மோட்சம் கிடைக்கப்பெறுமா அரசனிடமிருந்து?’ – என்று துணிச்சலாய் கேட்ட சிங்களக் கவிஞர் மஞ்சுள வெடிவர்தன, இப்போது ஃபிரான்ஸில் வசிக்கிறார். ‘மேரி எனும் மரியா’ என்ற இவரது சிறுகதைத் தொகுப்பு சிங்கள அரசால் 2000-ம் ஆண்டில் தடை செய்யப்பட்டது. ஆனாலும், அச்சம் இல்லாமல் தமிழர் தரப்பு நியாயங்களுக்காக இவரது கவிதைகள் பேசின. இலங்கை அரசால் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டபோது, இலங்கையில் வாழ முடியாமல் வெளியேறினார் மஞ்சுள வெடிவர்தன. சிங்களத்தில் அவர் எழுதிய கவிதைகளை, ஈழத்து தமிழ் இலக்கிய ஆளுமைகளான ஃபஹீமா ஜஹான், எம்.ரிஷான் ஷெரீப் ஆகிய இருவரும் தமிழுக்குக் கொண்டுவந்துள்ளனர்.
- See more at: http://www.noolulagam.com/2014/06/21/168227/#sthash.kIqpE1hL.dpuf
‘கை கால்களால் தமிழர்களின் நெஞ்சங்களைப் பிளந்து
மனதால் மகிழும் இழிவானவர்களின் மத்தியில் நின்று
புத்தனின் வருகை நிகழ்ந்த பூமியிலிருந்து
கவியெழுதும் எனக்கு மோட்சம் கிடைக்கப்பெறுமா அரசனிடமிருந்து?’ – என்று துணிச்சலாய் கேட்ட சிங்களக் கவிஞர் மஞ்சுள வெடிவர்தன, இப்போது ஃபிரான்ஸில் வசிக்கிறார். ‘மேரி எனும் மரியா’ என்ற இவரது சிறுகதைத் தொகுப்பு சிங்கள அரசால் 2000-ம் ஆண்டில் தடை செய்யப்பட்டது. ஆனாலும், அச்சம் இல்லாமல் தமிழர் தரப்பு நியாயங்களுக்காக இவரது கவிதைகள் பேசின. இலங்கை அரசால் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டபோது, இலங்கையில் வாழ முடியாமல் வெளியேறினார் மஞ்சுள வெடிவர்தன. சிங்களத்தில் அவர் எழுதிய கவிதைகளை, ஈழத்து தமிழ் இலக்கிய ஆளுமைகளான ஃபஹீமா ஜஹான், எம்.ரிஷான் ஷெரீப் ஆகிய இருவரும் தமிழுக்குக் கொண்டுவந்துள்ளனர்.
- See more at: http://www.noolulagam.com/2014/06/21/168227/#sthash.kIqpE1hL.dpuf

Wednesday, September 3, 2014

'With You, Without You' - திரைப்பட இயக்குனர் ப்ரசன்ன விதானகேயுடன் ஒரு நேர்காணல்



            பல விருதுகளுக்குச் சொந்தக்காரரான இலங்கையைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர் ப்ரசன்ன விதானகேயின் 'With You, Without You' (உன்னுடன், நீயில்லாமல்) எனும் திரைப்படமானது, கடந்த ஜூன் மாதத்திலிருந்து இந்தியத் திரையரங்குகளில் திரையிடப்பட திட்டமிடப்பட்டிருந்தது.

            யுத்த கால இலங்கையைப் பின்புலமாகக் கொண்ட இத் திரைப்படமானது, ஒன்று சேரவே முடியாத இடைவெளியை ஏற்படுத்திச் சென்ற மோதலொன்றின் இடையே, தற்செயலாகச் சந்திக்க நேரும் இருவரைச் சுற்றி பின்னப்பட்ட கதையாகும். அவர்கள் இருவருக்கும், அந்த இடைவெளியை அழித்து ஒன்று சேர காதல் உதவுமா அல்லது அவர்களது இறந்த காலமானது தொடர்ந்தும் நிகழ்காலத்தைப் பாதித்துக் கொண்டேயிருக்குமா என்பதைப் பற்றியே இத் திரைப்படம் பேசுகிறது.

            இந்தத் திரைப்படத்தில் பிரதான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் நடிகை அஞ்சலி பட்டீலுக்கு, இத் திரைப்படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக  2012 ஆம் ஆண்டு நடந்த இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டிருக்கிறது. அத்தோடு இத் திரைப்படமானது, லண்டன் BFI, சிக்காகோ, ஹொங்கொங், கேரளா மற்றும் சர்வதேச திரைப்பட விழாக்கள் பலவற்றிலும் திரையிடப்பட்டுள்ளது.

கேள்வி - 'With You, Without You' திரைப்படமானது தஸ்தாவேஸ்கியின் 'A Gentle Creature' எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். இந் நாவலின் கதையை, இலங்கையின் யுத்த காலத்தோடு தொடர்புபடுத்தலாம் என உங்களுக்கு ஏன் தோன்றியது? அவ்வாறு உங்களுக்குத் தோன்றச் செய்தது எது?

பதில் - வளர்ந்துவரும் திரைக்கதையாசிரியர் ஒருவர், இந் நாவலை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையின் யுத்த காலப் பின்னணியில் தான் எழுதிய கதையை என் கவனத்தில் கொண்டு வந்தார். தஸ்தாவேஸ்கியின் இந் நாவலானது, பல தளங்களில் விரியும் படைப்பு. அதன் ஒரு தளமானது நுகர்வுக் கலாசாரம், மானிடத் தொடர்புகளை சீர்குலைப்பதை விவரிப்பதாக அமைந்திருப்பதாக பல விமர்சகர்கள் தங்கள்  கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்கள். இந்தக் கருவானது, அகிலம் முழுவதற்கும் பொருந்தக் கூடியதாகவும், நிரந்தரமானதுமென நான் சிந்தித்தேன்.

            இலங்கையும் மூடிய பொருளாதாரத்திலிருந்து திறந்த பொருளாதார சமூகத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதால், இது பொருத்தமான உருவகம் என நான் உணர்ந்தேன். யுத்தம் எனப்படுவது வலியவர்களது ஆட்சி அதிகாரங்களுக்காக, மக்களுக்கிடையே ஏற்படக்கூடிய மோதலாகும். இந் நாவலின் கதையானது ஆண்மையை சீர்தூக்கிப் பார்க்கும் கதையொன்றென இந் நாவலை வாசிக்கும்போது எனக்குத் தோன்றியது. யுத்த காலத்தில் இலங்கைக்குள் நிலவிய 'ஆண்மையை' விமர்சனம் செய்வதற்கு இக் கதையின் மூலமாக எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

            பிரதான கதாபாத்திரங்கள் இரண்டுமே இனங்களால் வேறுபட்டும், யுத்த களத்திலிருந்து வந்தவர்களாகவும் இருப்பின், அவர்களது தொடர்புகளையும், எதிர்நோக்கும் சவால்களையும், பல பரம்பரைகளாக நிகழ்ந்த யுத்தத்தின் பின்னர்  வழமைக்குத் திரும்ப முயற்சிக்கும் முழு இலங்கையின் நிலவரத்தையும் ஒரு உருவகமாகப் பயன்படுத்தலாம் என எனக்குத் தோன்றியது. இரு தரப்பினருமே அடுத்தவரின் கோணத்திலிருந்து பார்க்க ஆரம்பிக்காத வரையில் அமைதி ஏற்படாது என நான் நம்புகிறேன். இச் சிறு நாவலை, பல தடவைகள் வாசித்த பின்னரே நான் திரைக்கதையை எழுதினேன்.

கேள்வி - திரைப்படத்துக்கான பணம் எங்கிருந்து  கிடைத்தது?

பதில் - இந்தியாவை அடிப்படையாகக் கொண்ட ஆகார் எனும் அமைப்பின் மூலமாக ஆதாரப் பணம் கிடைத்தது. தெற்காசியாவில் நிலவும் ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தும் ஆவணப்படமொன்றை உருவாக்கித் தரும்படி அவர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டனர். ஆரம்பத் திரைக்கதையை வாசித்து முடித்ததன் பிற்பாடு, எனது விருப்பத்திற்கேற்ப இத் திரைப்படத்தை உருவாக்க அவர்கள் அனுமதித்தார்கள். மேலதிக செலவுகளை இலங்கைத் தயாரிப்பாளர்கள் இருவர் ஏற்றுக் கொண்டார்கள்.

கேள்வி - இத் திரைப்படம், இதுவரையில் இலங்கையில் திரையிடப்பட்டிருக்கிறதா? இலங்கையில் திரையரங்குகள் மூடப்படுவதானது, திரைப்படங்களைத் திரையிடுவதில் பாதக விளைவுகளை ஏற்படுத்துவதாக நீங்கள் முன்பு கூறியிருக்கிறீர்கள். இப்பொழுது அந் நிலவரத்தில் மாற்றமேதும் உள்ளதா?

பதில் - இத் திரைப்படமானது இன்னும் இலங்கையில் திரையிடப்படவில்லை. இது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டதாகும். இலங்கையில் தற்போதிருக்கும் திரையரங்குகள் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாறும்வரை நான் காத்திருக்கிறேன். இப்போது, நாம் உரையாடும் இக் கணம் வரை கூட அவ்வாறான மாற்றம் ஏதும் இடம்பெறவில்லை. திரையரங்குகள் மூடப்படும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இந் நிலையில், திரையரங்குகள் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாற்றம் பெறாவிடில், இன்னும் பல திரையரங்குகள் மூடப்பட்டு நிலைமை இன்னும் மோசமாகும்.

கேள்வி - இத் திரைப்படம், இந்தியத் திரையரங்குகளில் திரையிடப்படுவது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில் - நானென்றால், எனக்கு இவ்வளவு காலம் நடந்தவற்றில் சிறந்ததாக நினைப்பது அதைத்தான். ஏனென்றால் இந்தியா எனப்படுவது எனக்கு மிகச் சிறப்பான ஒரு இடம். சரியாகச் சொல்வதானால் என்னுடைய இரண்டாவது வீடு போன்றது அது. சினிமா என்பதால் மாத்திரமல்ல, எல்லாவற்றினாலும். நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில், இத் திரைப்படத்தைத் தயாரித்திருப்பது இந்தியத் தயாரிப்பாளர்கள் என்பதால் மட்டுமல்ல. சென்னையிலுள்ள பிரசாத் கலைக்கூடத்திலேயே பிற்தயாரிப்பு வேலைகள் நடைபெற்றன. இத் திரைப்படத்தைத் தொகுத்தது தேசிய விருது பெற்ற தொகுப்பாளர் திரு.ஏ.ஸ்ரீகர் ப்ரஸாத். ஒலி வடிவமைத்தது ஒரு இந்தியக் கலைஞர். பிரதான கதாபாத்திரத்தை ஏற்று நடித்தது, தேசிய விருது பெற்ற இந்திய நடிகை அஞ்சலி பட்டீல். இவர்கள் அனைவருமே இவ்வளவு ஈடுபாட்டோடு இத் திரைப்படத்தில் பணியாற்றியமையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இத் திரைப்படத்தை இந்தியாவில் திரையிடுவதே இவர்களுக்கு வழங்கக் கூடிய அதியுயர் விருதுகளாகும்.

கேள்வி - இலங்கை திரைப்படத் துறையில் இருக்கும் மோசமான நிலைமைக்கு ஏற்ப, நீங்கள் இத் திரைப்படத்துக்காக செலவிட்ட பணத்தை மீளவும் எவ்வாறு பெற்றுக் கொள்வீர்கள்?

பதில் - திரையரங்குகளில் திரையிடுவது, செய்மதி தொலைக்காட்சி மற்றும் DVD உரிமையை வழங்குதல் போன்ற வரையறுக்கப்பட்ட வழிமுறைகள் மாத்திரமே இப்போதைய நிலைமையில் தயாரிப்பாளர்களின் கையில் உள்ளது. இலங்கையில் திரையிடப்படும் திரைப்படங்களில் 95% ஆனவை, படத்துக்காக செலவழிக்கப்பட்ட பணத்தைக் கூட மீளப் பெற்றுத் தராதவை. எதிர்காலத்தில் எமது நிலைப்பாட்டுக்காக செய்மதி தொலைக்காட்சியில் திரையிடும் உரிமையை வழங்குவது, Video on demand, ITunes downloads, Vimeo, Netflix, Amazon, YOUTUBE streaming ஆகிய வலைத்தளங்களில் பதிவேற்றுவது போன்ற பணம் ஈட்டக் கூடிய வழிமுறைகளில் ஈடுபட நேரிடும். திரைப்படக் கலைஞர்கள் தேசிய சந்தையைத் தாண்டிச் சென்று, வேகமாக முன்னேறிவரும் தொலைத்தொடர்பு ஊடகங்களினூடாக பயனைப் பெற்றுக் கொள்வது நல்லதென நான் நம்புகிறேன்.

கேள்வி - நீங்கள் இந்திய நடிகை அஞ்சலி பட்டீலைத் தேர்ந்தெடுத்தது எப்படி?


பதில் - இந்தக் கதாபாத்திரத்தைக் குறித்து நான் இந்திய ஒலி சீரமைப்புக் கலைஞர் தபாஸ் நாயக்கிடம் விபரித்ததன் பின்னர், அவர் அஞ்சலி பட்டீலின் புகைப்படங்கள் சிலவற்றை என்னிடம் அனுப்பியிருந்தார். நான் சென்னையில் ஏற்பாடு செய்திருந்த நடிகர்கள் தேர்வு நிகழ்விற்கு அவரை அழைத்திருந்தேன். தேர்வுக்காகப் பலரும் வந்திருந்தபோதும், அவருக்குள் இருந்த அப்பாவித்தனத்தையும், முரட்டுத்தனத்தையும் ஒன்றாகக் காட்டும் திறமையானது, ஏனையவர்களை விடவும் அவரிடம் மிகைத்திருந்ததைக் கண்டோம். அவர் அக் கதாபாத்திரத்துக்கு பொருத்தமானவராக இருப்பார் என நாங்கள் தீர்மானித்தோம். அவருக்குள்ளிருந்த நன்னெறிகளுக்கிணங்க வேலை செய்யும் குணம், ஈடுபாடு மற்றும் தொழில்முறை நேர்த்தி ஆகியன என்னை வியப்புக்குள்ளாக்கியது. எனது தேர்வு மிகப் பொருத்தமாக அமைந்ததையிட்டு மிகுந்த திருப்திக்குள்ளானேன்.

கேள்வி - இந்தியாவும், இலங்கையும் திரைத்துறை மூலமாக சம்பந்தப்பட்டிருப்பது எவ்வாறு? கூட்டுறவாக இணைந்து இயங்குவதற்கான சாத்தியங்கள் எவ்வாறு உள்ளது?

பதில் - எனது அனேகத் திரைப்படங்களின் பிற்தயாரிப்பு வேலைகளைச் செய்தது சென்னையில்தான். ஸ்ரீகர் ப்ரசாத், தபாஸ் நாயக் போன்ற முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களோடு இணைந்து பணியாற்றக் கிடைத்தமை எனது அதிர்ஷ்டம்.

            அநேகமான இந்திய திரைத்துறைக் கலைஞர்கள் தம் படப்பிடிப்புக்களுக்காக இலங்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். யுத்தத்தின் பின்னர், திரு.அநுராக் காஷ்யப், தனது Bombay Velvet திரைப்படத்தின் அனேக காட்சிகளை இலங்கையில் படமாக்கினார். எதிர்காலத்தில் நான், இன்னும் பல இந்தியக் கலைஞர்களோடும், தொழில்நுட்பக் கலைஞர்களோடும் இணைந்து பணியாற்றவும், இந்தியக் கூட்டுத் தயாரிப்புக்களில் பங்குகொள்ளவும் எதிர்பார்த்திருக்கிறேன். வூடி ஆலன் சொன்னது போல, வெற்றியின் 80% ஆனது, காட்சிப்படுத்துவதாகும். நெருங்கிய அயலவர்களாக நாம்  ஒருவருக்கொருவர் வாயில்களில் அவர்களுக்காக முன் நிற்போம். அந்த ஒற்றுமையின் பலனாக நலன்கள் கிடைக்கப் பெறும் விதத்தைப் பார்த்திருப்போம்.


- எம்.ரிஷான் ஷெரீப்
நன்றி
# அம்ருதா இதழ், ஜூலை - 2014
# வல்லமை இதழ் 
# இனியொரு இதழ்

Monday, March 3, 2014

எங்கும் சொல்லப்படாத மௌன மொழிகளின் கண்ணீர்



எழுத்தாளர் வெங்கட் சுவாமிநாதன் அவர்களால் 
'வல்லமை 2014' சிறப்புப் பரிசினை வென்ற எனது புத்தக மதிப்புரை


நூல்  - சயாம் மரண ரயில் (நாவல்)
ஆசிரியர் - சண்முகம்
பக்கம்:  304  
விலை: ரூ. 150/-
வெளியீடு: தமிழோசை பதிப்பகம்
___________________________________________________________________________________________     
       தனது வாழ்விடத்திலிருந்து தமிழ் பேசும் மக்கள் புலம்பெயர்ந்து செல்லாத இடங்களேயில்லை என்றாக்கி விட்டன காலமும், போர்களும். எல்லாவற்றுக்கும் காரணங்களைத் தேடுகிறது வரலாறு. அவை சொல்லும் பாடங்கள் விலைமதிப்பற்றவை. பலரும், பல இன்னல்களை அனுபவித்து, பல இழப்புக்களைச் சந்தித்து, அந்த அனுபவங்கள் மூலம் கற்றுத் தரும் பாடங்கள், காலம் காலமாக எழுதி வைக்கப்பட வேண்டியவை. அவையே காலப்பதிவுகளாகி விடுகின்றன. தமிழ் பேசும் மக்களின் ஆதி பரம்பரைகள் எதிர்கொண்ட துயரங்களும், இழப்புக்களும் தற்கால சந்ததியினருக்கு அநேகமாகத் தெரிய வருவதில்லை. அவை காலத்தின் நீட்சிக்குள் மறைக்கப்பட்டிருக்கின்றன. இக் காலத்தில் பல தசாப்தங்களை வாழ்ந்து அனுபவித்த முதியவர்களுக்கும் கூட தமது எதிர்கால சந்ததியினருக்காக தாம் அனுபவித்த அல்லது தமது மூதாதையர் அனுபவித்த வாழ்க்கை குறித்த உண்மைக் கதைகளை பேரப் பிள்ளைகளுக்குச் சொல்ல நேரமிருப்பதில்லை அல்லது செவிமடுக்க பிள்ளைகளுக்கு நேரமில்லை.
           இன்றைய காலத்தில் 'சயாம் - மரண ரயில் பாதை'யைப் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் தாய்லாந்திருந்து பர்மா வரைக்குமான ரயில்பாதை அமைப்பதற்காக எத்தனை ஆயிரம் தமிழ் பேசும் மக்கள் பலியிடப்பட்டார்களென்பதை எத்தனை பேர் அறிவர்? ஜப்பான் அரசால், ரயில் பாதை அமைக்கும் பணியில் பிரித்தானிய, அவுஸ்திரேலிய போர்க்கைதிகள் பல்லாயிரக்கணக்கில் ஈடுபடுத்தப்பட்ட போதும், சுரங்கம் தோண்டவும், மண் அள்ளவும் ஆசியத் தொழிலாளர்களே பயன்படுத்தப்பட்டுள்ளனர். மலேசியா, சிங்கப்பூர் போன்ற பகுதிகளில் தோட்டங்களில் வேலை செய்துவந்த தமிழர்கள், இவ் வேலைகளுக்காக ஏமாற்றப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டதோடு, பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் பலவந்தமாகப் பிடிக்கப்பட்டும், ஏமாற்றியும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்பதே வரலாறு சொல்லும் பகுதியாக இருக்கிறது. இவர்கள் அனைவருமே ஜப்பானியரால் கடுமையாக வேலை வாங்கப்பட்டுள்ளனர் என்பதனை செத்துப் பிழைத்து வந்த பலரும் உறுதிப்படுத்துகின்றனர். போதியளவு உணவுமின்றி, போதியளவு மருத்துவ வசதிகளுமின்றி மரணமடைந்த மற்றும் கொல்லப்பட்ட சக உறவுகளைப் பார்த்து, துன்பங்களை அனுபவித்து, மீண்டு வந்த ஒரு இளைஞனின் கதையோடு, ஒரு வரலாற்று ஆவணமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு தொகுப்பாக உள்ளது மலேசிய எழுத்தாளர் சண்முகத்தின் 'சயாம் மரண ரயில்' நாவல்.

            பஞ்சத்தின் காரணமாகவும், குடும்பத்தினருக்கு உதவுவதற்காக வேண்டியும் தனது வீட்டிலிருந்து வேலை தேடித் தப்பிச் செல்லும் இருபது வயது மாயா, சயாம் மரண ரயில் பாதைக்கு வந்து சேர்வதும், அங்கு அவன் சந்திக்க நேரும் மனிதர்களும், அவனது வாழ்க்கை கட்டமைக்கப்படும் விதமும், அங்கிருந்து மீண்டு வரும் விதமும் நாவலின் நகர்வினைத் தீர்மானித்திருக்கின்றன என்றபோதிலும், நாவல் எழுதப்பட்ட பின்னணிதான் இங்கு விசேடமானது. இந் நாவலை வாசிக்கவென கையிலெடுக்கும் எவரும் தூர விலத்திவிடாதபடி கட்டிப் போடுகிறது அப் பின்னணி. பலவந்தமாகப் பிடிக்கப்படும் தமிழர்கள் சயாம் மரண ரயில் பாதைக்குக் கொண்டு செல்லப்படுவதும், அங்கு நடைமுறையிலிருக்கும் ஜப்பான் அரசின் சட்டங்களும், விதிமுறைகளும், படுகொலைக்களங்களும் ஒரே தடவையில் முழுமையாக அந் நாவலை வாசித்து விடச் செய்கிறது. வாழ்வின் துயரங்களோடு, பல திருப்பங்களையும் கொண்டு எழுதப்பட்ட உண்மை நிகழ்வுகளின் தொகுப்பாக இந் நாவல் பார்க்கப்பட வேண்டியது அவசியம்.


            ஜப்பான்காரர்களின் சித்திரவதைகள், காட்டு பர்மியர்களின் மறைமுகத் தாக்குதலும், கொள்ளையும், சீனர்களின் மனிதாபிமானமற்ற நடைமுறைகள், வாந்திபேதி, மேக நோய் போன்றவற்றின் தீவிரத் தாக்குதல் போன்ற பல இன்னல்களை அம் மக்கள் எதிர்கொள்ள நேர்ந்தமையை தெளிவாக விளக்குகின்றது எழுத்தாளர் சண்முகத்தின் வரிகள். வெறுமனே கதையை மாத்திரம் சொல்லிச் செல்பவராக இல்லாமல் அவர் வரலாற்றின் பக்கங்களை மேற்கோள் காட்டி, அந்த ரயில் பாதையை படங்களோடு விளக்கியிருப்பதுவும், அக் காலத்தின் அரசியல் நிலைப்பாடுகளையும், வரலாற்று நிகழ்வுகளையும் இடைக்கிடையே கதையோடு சேர்த்து எழுதியிருப்பதுவும் நிலைமையின் தீவிரத்தையும், உண்மைத்தன்மையையும் உணர்த்துகிறது. 'சயாம் மரண ரயில்' - எங்கும் சொல்லப்படாத மௌன மொழிகளின் கண்ணீர் வரலாற்றினைக் கொண்டது. தமிழோசை பதிப்பகத்தால் 2007 ஆம் ஆண்டு வெளிவந்திருக்கும் இத் தொகுப்பு, தமிழ் பேசும் மக்கள் ஒவ்வொருவரது வீட்டிலும் வைத்துப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு ஆவணமென உறுதியாகச் சொல்லலாம்.

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# வல்லமை இதழ்
# அம்ருதா இதழ்
# எதுவரை
# இனியொரு

Wednesday, January 15, 2014

பெண்மனதின் அரூப யுத்தம் 'அம்மாவின் ரகசியம்'

பெண்மனதின் அரூப யுத்தம் 'அம்மாவின் ரகசியம்'
- ஷங்கர் ஆர்மன்ட், ஃபிரான்ஸ்

குறுநாவல் - அம்மாவின் ரகசியம்
ஆசிரியர் - சுநேத்ரா ராஜகருணாநாயக
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்
வெளியீடு - காலச்சுவடு பதிப்பகம்
விலை - ரூ 55

            மனிதர்களின் வாழ்க்கைகளை தடம்புரள செய்வதில் அடக்குமுறை, அதிகாரங்கள் ஆகியன இனபேதங்களைப் பார்ப்பது இல்லை. விதவிதமான புரட்சிகளும் கூட தம் இலட்சியப் பயணங்களின் பாதைகளில் நசுங்கி விழும் சாதாரணர்களின் வாழ்க்கைகளிற்காக தம் நடையை நிறுத்துவதும் இல்லை. இந்த இரு எதிர் இயக்கங்களின் போக்குகளினூடு, மனிதர்கள் தம் வாழ்வின் போக்குகள் மாறிச் சிதையும் வினோதங்களை கண்டபடியே தாம் அடைய முடிந்திடா இலக்குகளை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரமும் சரி, புரட்சியும் சரி வீழ்ச்சியடையும் மனிதர்களின் வாழ்க்கைகளை தம் பிரச்சாரங்களிற்காகவே பயன்படுத்தக் கற்றுக் கொண்டிருக்கின்றன. படைப்பாளிகளே சாதாரணர்களின் வீழ்ச்சிகளை மானுட அக்கறையுடன் பதிந்து செல்பவர்களாக இருக்கிறார்கள்.

            'அம்மாவின் ரகசியம்' எனும் இக் குறுநாவல் இலங்கையிலுள்ள 'உடவளவ' எனும் கிராமத்தில் வாழ்ந்திருந்த முத்துலதா எனும் பெண்ணின் வாழ்க்கை பெறும் மாற்றங்களை தன் சொற்களில் அரங்கேற்றுகிறது. 1970 களிலும் 1980 களிலும் இலங்கை அரச அதிகாரங்களிற்கு எதிராக புரட்சி செய்த தென்னிலங்கையை சார்ந்த புரட்சி அமைப்பான 'ஜனதா விமுக்தி பெரமுன'விற்கு எதிராக பொலிஸ் மற்றும் இராணுவத்தின் உதவியுடன் கட்டவிழ்த்து விடப்பட்ட அரச வன்முறைகளின் பின்ணனியில் கதையின் ஆரம்பப் பகுதி கூறப்படுகிறது.

            வறிய குடும்பமொன்றில் பிறந்த முத்துலதா, அரசாங்க உத்தியோகத்திலிருக்கும் உதயசிறியை திருமணம் செய்து கொள்கிறாள். முத்துலதா, உதயசிறியைத் திருமணம் செய்து கொள்ளும் முடிவிற்கு வருவதற்கு, முத்துலதாவின் தாய் பேபிநோனா, அவளை ஒரு விளக்குமாறு கட்டை உடையும்வரை அடிக்க வேண்டியிருந்தது. பேபிநோனாவிற்கு, தன் மகளின் வாழ்க்கையும், தன் வாழ்க்கைபோல ஆகிவிடக்கூடாது எனும் அக்கறை. பாலம் கட்ட வந்தாலும், படம் வரைய வந்தாலும் ஊர்க் குமரிகளின் வாழ்க்கைகள் பல அவ்வாறு வருபவர்களிடம் பலியாகத் தவறுவது இல்லை என்பதை பேபிநோனா அனுபவம் வழி அறிந்திருக்கிறாள். கிராமங்களில் தம் காமத்தைத் தணிக்கத் தவறாத, நகர்ப்புற அரச உத்தியோகஸ்தர்களின் இந்தப் பண்பாட்டை அந்த ஒரு வரியிலேயே ஆழமாக பதித்திருக்கிறார் கதாசிரியை சுநேத்ரா ராஜகருணாநாயக.

            'உடவளவ' அமைதியான ஒரு கிராமம். சேனைப்பயிர்ச் செய்கை, இரத்தினச் சுரங்கங்களில் கூலி வேலை போன்றவற்றில் வறிய குடும்ப ஆண்கள் சிறுவயது முதலே இறங்கிவிடுகிறார்கள். பெண்கள் வசதி படைத்த வீடுகளில் பணிப்பெண்களாகவோ அல்லது தெருவோர உணவுக் கடைகளை நடத்துபவர்களாகவோ தம் வாழ்க்கைகளைக் கொண்டு செல்கிறார்கள். ஆறு கதிரைகளும், ஒரு மேசையும், ஒரு கண்ணாடி அலுமாரியும் எல்லாப் பெண்களினதும் கனவுகளிலும் இருக்கின்றன என்பதன் வழி அந்த அடித்தட்டு வர்க்கப் பெண்களின் கனவுகளின் உச்சம் என்ன என்பதை சுநேத்ரா தெளிவாக உணர்த்தி விடுகிறார். முத்துலதாவிற்குள்ளும் இக் கனவு இருக்கவே செய்கிறது. ஆனால் அவள் ஒரு தையல் இயந்திரத்தை வாங்குகிறாள். தான் தைத்துச் சம்பாதித்துச் சேகரித்த பணத்தில் அவள் மேலும் தையல் இயந்திரங்கள் வாங்க ஆசைப்படுகிறாள். தன் குடும்பத்தின் நிலை மாறவேண்டும் என எல்லாப் பெண்களுக்கும் இருக்கும் இலட்சியம் அவளிற்குள்ளும் உண்டு. அதிக பணம் கிடைக்கும் என தொப்பிகள்கூட தைத்து  விற்கிறாள். ஆனால், அவளது வாழ்க்கை நிலையில் பெரிதான மாற்றங்கள் எதையும் அவள் கண்டுவிடுவது இல்லை. முத்துலதாவின் கணவன் உதயசிறி கடினமான வேலைகளை செய்து பழக்கம் இல்லாதவன். ஆனாலும் நல்ல கணவன். நாட்டின் அரசியல் சூழல் குறித்த செய்திகளை வாசிக்கும் ஆர்வம் அவனுக்கு உண்டு. தலையில்லா உடல்கள் வீதிகளில் வீசப்படுவதும், டயர் அடுக்குகளினுள் மனிதர்கள் எரிக்கப்படுவதும், ஆறுகளில் உயிரற்ற சடலங்கள் மிதந்து வருவதும் என நாட்டின் நிலைமை சற்று பதட்டமாக இருக்கும் ஒரு காலத்திலேயே கதை நிகழ்கிறது. கணவன் உதயசிறியின் அரசியல் ஆர்வம் செய்திகளை வாசிப்பதுடன் திருப்தியுற்று விடும். அவன் எல்லை அவ்வளவே. பொலிஸைக் கண்டால்கூட விலகியே செல்பவன் அவன். ஆனால், உதயசிறி வீட்டில் இல்லாத ஒரு நாளில் அவனது தம்பியைத் தேடி அவன் வீட்டிற்கு இராணுவத்தினர் வருகிறார்கள். அந்தப் பொழுதில் இருந்து முத்துலதாவின் வாழ்க்கையானது அதன் வழமைநிலையை இழந்து போகிறது. தன் கணவனிற்குப் பதிலாக இராணுவ முகாம் செல்லும் முத்துலதா அங்கிருந்து திரும்புகையில் தன்னுடன் கூடவே ஒரு ரகசியத்தையும் எடுத்து வருபவள் ஆகிறாள்.

            முத்துலதா, உதயசிறி, பேபிநோனா போன்ற பாத்திரங்கள் வழியாக உடவளவயின் அன்றைய நிலையை வாசகனிடம் ஆர்ப்பாட்டங்களின்றி எடுத்துச் சொல்கிறார் சுநேத்ரா. அடித்தட்டு மக்கள், அரசாங்க ஊழியர்கள், வசதி படைத்தவர்கள், அதிகாரமிக்கவர்கள் ஆகியவர்களினூடாக நகரும் கதையானது, அடித்தட்டு மக்களின் குரலிலேயே பேசப்படுகிறது. இதன் பின்னணியில் அம் மக்களை திகில் அடையச் செய்து கொண்டிருக்கும் நாட்டின் நிலையும் கூடவே வருகிறது. தன் கணவனை இழந்த பின்பாகவும்கூட தன் மனதில் வாழும் அந்த ரகசியத்துடன் முத்துலதா தன் வாழ்க்கையை மாற்றப் போராடுபவளாகவே இருக்கிறாள். முத்துலதா தன் வாழ்க்கை நிலை மாற வேண்டும் என்பதை வாழ்வின் துடிப்பாக கொண்ட பெண். இராணுவத்தினரை வெட்டிப் போட வேண்டும் எனும் கோபம் குடிவந்து அமர்ந்த பெண். இலங்கையில் வாழும் ஒரு அப்பாவிப் பெண்ணை இன மத பேதமின்றி அவளால் பிரதிநிதித்துவம் செய்ய முடிகிறது. எல்லைகளைத் தாண்டி, உலகில் வாழ்ந்திருக்கும் வறிய அப்பாவி பெண்களையும் அவளால் பிரதிநிதித்துவம் செய்ய முடிகிறது. தம் வாழ்க்கை நிலையை உயர்த்த வேண்டும் எனும் முனைப்புடன் நகர்ந்து கொண்டிருக்கும் பெண்களை அவர்கள் வாழும் நிலை மாறும்வரையில் நாம் அவதானிப்பதே இல்லை.

            முத்துலதா, வீதியோர உணவகத்தினை நடாத்துகிறாள். அயல்நாடுகள் சென்று பணிப்பெண்ணாக பணிபுரிகிறாள். துபாய், சைப்பிரஸ், பிரான்ஸ், சீனா என அவள் வாழ் அனுபவங்கள் நீள்கின்றன. ஆனால் அவள் மனதில் உள்ள ரகசியம் ரகசியமாகவே இருக்கிறது. அதை அவள் யாரிடமும் கூறியது இல்லை. அயல்நாட்டில் பணிபுரிந்து, அவள் தனது வீட்டை அழகானதாகவும், உடவளவயிலேயே அற்புதமான பொருட்கள் நிறைந்ததாகவும் நிரப்பி தன் வாழ்க்கை நிலையை மாற்றியமைத்துவிட்ட பொழுதிலும் கூட அவளது ரகசியம் அவளிடமே இருக்கிறது. தனது வீடு எப்போதும் சுத்தமானதாகவே இருக்க வேண்டும் என்பதில் முத்துலதா முனைப்பாக இருக்கிறாள். சேற்றுக்காலுடன் தன் வீட்டிற்குள் யாரும் வரக்கூடாது என்கிறாள். வெற்றிலைச் சாற்றை உமிழ்ந்து தன் முற்றத்தை யாரும் அசிங்கப்படுத்த வேண்டாம் என்கிறாள். அவள் அகத்தில் வாழ்ந்திருக்கும் ரகசியத்திற்கு எதிரான தூய்மை கொண்டதாக முத்துலதா தன் புறத்தை பேணுவதில் அக்கறையாக இருக்கிறாள். தனித்து வாழும் பெண்கள் உள்ள ஒரு வீட்டில் அவள் ரகசியம் அவர்களை உயிருடன் புசிக்க விரும்பும் ஒரு அரக்கனாக  இருக்க முயல்கிறது. அவள் பிறர்க்கு விதிக்கும் கட்டுப்பாடுகளும், அவளின் வசதியான வாழ்க்கை நிலையும் ஊர் மக்களை துபாய்க்காரனிற்கும், சீனாக்காரனிற்கும் தூக்கிக் கொடுத்து கொண்டு வந்து கொட்டிய சொத்துதானே இது எனப் பேச வைக்கிறது. முத்துலதா அசையவில்லை. தன் மனதில் சுமையாக ஏறி அமர்ந்திருக்கும் ரகசியத்தை வெளியில் உரைத்தாள் இல்லை. ஆனாலும் ஒருநாள் முத்துலதா அழுத்திப் பாதுகாத்து வைத்திருந்த ரகசியத்தை அவளாகவே வெளியே சொல்லும் சந்தர்ப்பம் அவளைத் தேடி தானாகவே வந்து சேர்கிறது.

            அலங்காரங்கள் ஏதுமற்ற, யதார்த்தம் நிறைந்த, எளிமையான எழுத்துக்கள்தான் சுநேத்ராவின் பலம். அவர் வாசகனை புதிர் நிறைந்த வரிகளால் வியக்க வைக்க முயல்வது இல்லை. மாறாக எளிமையின் ஆச்சர்யத்தில் பங்குகொள்ளச் செய்கிறார். இந்த எளிமையான கதையாடலே வாசகனை தயக்கமின்றி அவர் எழுத்துக்களுடன் இணக்கமாக்குகிறது. கதையை மொழிபெயர்த்திருக்கும் எம்.ரிஷான் ஷெரீப்பும் கதையை சரளமான தமிழ் நடையில் செவ்வனே மொழிபெயர்த்திருக்கிறார். ஒரு துன்பத்தை சுற்றி நெய்யப்படும் அழுவாச்சி காவியமாகவோ, அல்லது ஒப்பாரி சங்கீதமாகவோ கதையை உருவாக்காது, மிகையுணர்ச்சிகளின் உதவிகளை நாடாது, பரபரப்புக்களை விலக்கி, மனித மனங்களின் இயக்கங்களுடனும், வாழ்வின் நிகழ்வுகளுடனும், சம்பவங்களுடனும் இயல்பான ஓட்டத்தில் பயணிக்கிறது சுநேத்ராவின் குறுநாவல்.

            அயல்வாழ் மக்களது வாழ்க்கைகளின் ஒரு சித்திரத்தை அனுபவிக்கும் வாய்ப்பை சுநேத்ராவின் கதை எமக்கு வழங்குகிறது. சுநேத்ரா சிங்கள மொழியில் பிரபலமான படைப்பாளி. பல தளங்களிலும் இயங்குபவர். அவரது குறுநாவலான இந்த 'அம்மாவின் ரகசிய'த்தின் மிக முக்கியமான தருணம் அதன் முடிவில் முத்துலதா கூறுவதாக அமையும் வரிகளில் இருக்கிறது. "இப்ப அழ வேணாம். அந்த நாட்கள்ல எனக்கு அழத் தேவையிருந்தது ஆனாலும் அழ முடியாமப் போச்சு. எனக்கு செத்துபோக வேண்டியிருந்தது ஆனாலும் நான் வாழ்ந்தேன்" இவ்வரிகளைக் கூறி முடித்த பின்பும்கூட வாழ்க்கையிடமிருந்து அற்புதங்கள் எதையும் எதிர்பார்த்துக் காத்திராத ஒரு பெண்ணாகவே முத்துலதா புன்னகைக்கிறாள். கதையைப் படித்து வரும் வாசகனை அதில் பொதிந்திருக்கும் ஆழமான அர்த்தம் சற்று உலுக்கிப் பார்க்கவே முயல்கிறது. இந்த உலகில் எத்தனை பெண்கள் இதே போன்ற வரிகளை தம் வாழ்வில் சொல்லியிருப்பார்கள், எத்தனை பெண்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், எத்தனை பெண்கள் சொல்லப் போகிறார்கள். இந்தப் புள்ளியில் உலகின் பெண்கள் அனைவரையும் சுநேத்ரா தொட்டு விடுகிறார்.

            பெண்கள், வாழ்வு தரும் அற்புதங்களிற்காக காத்திருப்பவர்களாக இருக்க முடியாது. அவர்கள் தம் மனதின் ரகசியங்களோடு, அரூப யுத்தங்களை ஓயாது நிகழ்த்தியவாறே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ரகசியம் தன்னை அடையாளம் காட்டும்போது பலவீனமாகி விடுகிறது. ஆனால் அதை காலம்காலமாக சுமந்து வந்தவர்கள் கனமற்றவர்களாகி விடுகிறார்கள். அதன் பிறகு, வாழ்க்கையின் சொற்கள் அவர்களிடம் தயக்கமின்றி பேச ஆரம்பிக்கின்றன வசந்தத்தின் பூக்களைப்போல.

நன்றி
எழுத்தாளர் ஷங்கர் ஆர்மன்ட்
# காலச்சுவடு இதழ் - 168, டிசம்பர் - 2013
# பதிவுகள்
# திண்ணை

Wednesday, January 1, 2014

ரகசியம் பேசுதல்

 ‘அம்மாவின் ரகசியம் நாவலுக்கான முன்னுரை
எழுத்தாளர் அம்பை

குறுநாவல் - அம்மாவின் ரகசியம்
ஆசிரியர் - சுநேத்ரா ராஜகருணாநாயக
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்
வெளியீடு - காலச்சுவடு பதிப்பகம்
விலை - ரூ 55

பெண் வாழ்க்கையின் இடுக்குகளில் பொதிந்து கிடக்கின்றன பல ரகசியங்கள். அவை பல சமயம் அங்கேயே  கிடந்து மக்கிப்போகின்றன கல்லாக கனத்தபடி. அபூர்வமாகச் சில சமயம் அந்த ரகசியங்கள் பூப்போல மேலே மிதந்து வந்து இளைப்பாறலைத் தரும் வாய்ப்புகளை வாழ்க்கை ஏற்படுத்துகிறது. சில சமயம் ரகசியங்கள் மூர்க்கத்தனமாக உடைபடும் அபாயங்கள் நேர்கின்றன. சில சமயம் அவற்றைப் பேசியே ஆகவேண்டிய நிர்பந்தத்தை சிலர் எதிர்கொள்ளும்போது நூலிழை பிரிவதுபோல் மெல்லமெல்ல அவை பிரியலாம். அல்லது சலனமற்ற குளத்தில் எறிந்த கல்லைப் போல் அலைகளை ஏற்படுத்தலாம். அபூர்வமாக அவை அடுத்தவரின் மனத்தை இளக்கி உறவின் ஒரு மூடப்பட்ட சன்னலைத் திறக்கலாம். இந்தக் குறு நாவலில் வரும் முத்துலதாவுக்கும் ஒரு ரகசியம் இருக்கிறது. அது எப்படி உருவாகியது, அந்த ரகசியத்தை அவள் எப்படித் தாங்கினாள்,  ஏன்,  எப்படி அதை வெளியிடத் தீர்மானித்தாள் போன்றவற்றின் ஊடே கதை தன் பாதையை அமைத்துக்கொள்கிறது.

இந்தக் குறுநாவலை எழுதியிருக்கும் சுனேத்ரா ராஜகருணாநாயக சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் எழுதும் ஓர் எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், விமர்சகர், ஊடகவியலாளர் மற்றும் இதழாளர். இதுவரை பல உயர் விருதுகளைப் பெற்றிருப்பவர். 2009இல் ஸ்வர்ண புஸ்தக விருதும் 2010இல் தன் புத்ததாசி நாவலுக்காக All Ceylon Buddhist Congress  விருதும் இவர் எழுத்துக்குக் கிடைத்த அங்கீகாரங்கள்.

மிகச் சிறு வயதிலேயே எழுத ஆரம்பித்துவிட்டார் சுனேத்ரா. இடதுசாரி அரசியல் பற்றிய புரிதலும், எல்லோரையும் சமமாகப் பார்க்கும் மனப்பாங்கும் உள்ள குடும்பச் சூழ்நிலையில் வளர்ந்த சுனேத்ராவுக்கு எழுதுவது என்பது மூச்சு விடுவதைப் போல எளிதாக இருந்தது. தான் கட்டாயம் ஒரு நாவலாவது எழுதுவோம் என்ற நம்பிக்கை இருந்தது அவருக்குச் சிறு வயதிலிருந்தே. 1999இல் இவரின் முதல் நாவல் வெளிவந்து மூன்று மாதங்களிலேயே விற்றுப்போனது. ஆனால் ஒரு விமர்சனம் கூட வரவில்லை. அதற்காக அவர் முயலவில்லை. தொலைக்காட்சியிலும், நாடகத் துறையிலும், பத்திரிகைகளிலும் இவர் பல முறை செயலாற்ற நேர்ந்தபோதும் எந்தவித சமரசங்களுக்கும் உடன்பட மறுத்தே செயலாற்றினார். தொலைக்காட்சிகளில் பெண்களுக்கான நிகழ்ச்சிகள் வெறும் சமையல் நிகழ்ச்சிகளாக இல்லாமல் பெண்களைப் பாதிக்கும் பிரச்சனைகளைப் பேசும் ஒன்றாக மாற்றினார். நேரிடையாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக அரசியல் குறித்த விமர்சனங்களை வைக்கும் நிகழ்ச்சிகளைத் தயாரித்தார்.

பல கடுமையான, ஆபாசமான  விமர்சனங்களை இவர் எழுத்து எதிர்கொள்ள நேரிட்டது. அரசுக்குச் சொந்தமான ஆங்கிலச் செய்தித்தாள் இவரது நாவல் பொது புருஷயாவை கிட்டத்தட்ட ஓராண்டு தொடர்ந்து தாக்கி எழுதியது. ஐக்கிய தேசியக் கட்சியின் அரசைக் கவிழ்க்க ஜனதா விமுக்தி பெராமுனா முயன்றபோது பல இளைஞர்கள் கொல்லப்பட்டனர். 1971இலும் பிறகு எண்பதுகளின் இறுதியிலும்  ஜேவிபி இயக்கம் கொடூரமான முறையில் நசுக்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள் வீதிகளில் மரித்தனர். பள்ளி மாணவர்கள் கூட கடத்தப்பட்டனர். ஜேவிபி இயக்கத்தினர் புனிதர்கள் இல்லை; அவர்களும் அரசியல் கொள்கையில் மாறுபட்டவர்களை, ஏழைகளை,  இரக்கமில்லாமல் கொன்றார்கள். இந்த நாவலின் களம் சிற்றூர் ஒன்றில் பாதுகாப்புப் படையினரால் அலைக்கழிக்கப்பட்ட ஏழைச் சிங்களக்  குடும்பம். அதிலுள்ள ஒரு பெண் மனத்தில் புதைத்திருக்கும் ரகசியம் ஒன்று கடைசியில் வெளியே வருகிறது.

வெகு குறைவான விவரணைகள். சொற்களை விரயமாக்காத நடை. குறியீடுகளும் ஒப்புவமையும் கிடையாது. மிகை இல்லாத, மிகக் குறைந்த அளவுத் தளத்தில் உள்ள minimalist ஓவியம் போல் இருக்கிறது நாவல்.

சுனேத்ராவின் படைப்புலகை எட்டிப் பார்க்க அமைந்த ஒரு காலதர்தான் இந்த மொழிபெயர்ப்பு. இதன் பின் அப் படைப்புலகின் பெருஞ் சன்னல்களும் கதவுகளும் திறக்கப்படும் வாய்ப்பு உண்டு என்று கட்டியம் கூறும் மொழியாக்கக் காலதர். இத்தகைய படைப்பு ஒன்றை அதன் எல்லா அம்சங்களும் ஊறு படாமல் மொழியாக்கம் செய்வது மிகக் கடினமான வேலை. அதை ரிஷான் கவிஞராக இருப்பதால் மிகவும் செம்மையாகச் செய்திருக்கிறார். ஒரு வேளை இது தமிழில்தான் எழுதப்பட்டதோ என்று ஐயப்பட வைக்கும் மொழியாக்கம்.

சுனேத்ராவின் மற்ற படைப்புகளையும் ரிஷான் தமிழுலகுக்குக் கொண்டு வருவார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார் ரிஷான் இந்த மொழியாக்கம் மூலம். ஒரு பெருங் காற்று இந்த நாவல். இது அடித்து ஓய்ந்ததும் புயலும் வெள்ளமும் கூடவே மந்தமாருதங்களும் வரும் என்று எதிர்பார்ப்போம். அவற்றையும் ரிஷான் தன் வசப்படுத்திக்கொண்டு நமக்கு அளிப்பார் என்று நம்புகிறேன்.

நன்றி
# எழுத்தாளர் அம்பை
# காலச்சுவடு 
# பதிவுகள்
# திண்ணை