Wednesday, November 4, 2009

பாட்டு (மட்டும் தமிழில்) பாட வா



A : 'This episode third round for thirty thousand. Readyயா இருக்கீங்களா?'

B : 'Yeah..lets go '

A : 'Almost உங்களுக்கு preparation time வேற..so I think u must have done some homework'

B : 'Brushed up some of songs. பார்ப்போம்.'

A : 'பார்க்கலாம். So can we have the third round? '

    3 ஆவது சுற்றுப் பாடல் தேர்வுகள் அவருக்குக் காட்டப்படுகிறது.

B : ' I've choice த்ரிஷாவா இல்ல P.B.? '

A : ' Why P.B.ஸ்ரீநிவாஸ்? Its a male play back singer இல்லையா I mean?'

B : 'Yeah..but ..mm..I just felt I know some of his best solos..I know because நிறைய கேட்ட பாடல்கள். His best I mean just scream of solos that is sung like காலங்களில் அவள் வசந்தம் or songs like that..'

A : ' நிலவே என்னிடம் நெருங்காதே'

B : 'Yeah..I know such songs. Just ஆனா ரெண்டு மூணுதான் தெரியும். Very apprehensive. But till இருக்கும்னு ஒரு நம்பிக்கை..I'll go for P.B ஸ்ரீநிவாஸ் hits'

    பாடகர் P.B.ஸ்ரீநிவாஸ் பாடிய இரு பாடல்களின் ஆரம்ப வரிகள் திரையில் காட்டப்படுகின்றன. போட்டியாளர் அதிலொன்றைத் தெரிவுசெய்து, திரையில் கொடுக்கப்படும் அப் பாடலின் வரிகளைப் பார்த்துப் பாடவேண்டும். பாடலின் இடையில் ஆறு அல்லது ஏழு சொற்கள் இடைவெளியாக இருக்கும். அச் சொற்களை மறவாது சரியான இடத்திலிட்டு போட்டியாளர் பாடவேண்டும். ஒவ்வொரு பாடலுக்குமான பரிசுத்தொகை இந்திய ரூபாய்கள் பத்தாயிரத்திலிருந்து ஆரம்பித்து எட்டுப் பாடல்களின் முடிவோடு இந்திய ரூபாய்கள் ஐந்து இலட்சத்தை எட்டும்.

A : 'இந்த இரண்டு பாடல்கள்ல ரெண்டுமே the beautiful songs..the evergreen classics '

B : ' Yeah..so just..Yeah..its looks nice..ok..I think ..'

A : 'looks nice ?'

B : 'looks nice. its sounds good. aah நிலவே என்னிடம் நெருங்காதே would be a nice choice. ஏன்னா மௌனமே வார்த்தையாய் எனக்கு பாதிதான் தெரியும். I don't know அங்கிங்க scattered ஆ I know.But Im not sure. So I guess நிலவே என்னிடம் நெருங்காதே எனக்கு ஓரளவுக்கு நான் கேட்டிருக்கேன்.'

    கடந்த வாரம் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காணக் கிடைத்த கண்கொள்ளாக் காட்சியிது. ஆங்கிலத் தொலைக்காட்சியொன்றின் நிகழ்ச்சியா எனக் கேட்டுவிடாதீர்கள். சத்தியமாக இது தமிழ் பேசும் மக்களுக்கான விஜய் தொலைக்காட்சியின், பிரபலங்களைத் தமிழில் பேசவும், பாடவும் செய்வதற்காக நடத்தப்படும் 'பாட்டுப்பாட வா' நிகழ்ச்சியின் கடந்த வார அங்கம். மேற்சொன்ன அட்சர சுத்த ஆங்கில வார்த்தைகளை மொழிந்தவர்கள் இரு பிரபல பிண்ணனிப் பாடகிகள். சரி. இருவரும் வேற்றுமொழியைத் தாய்மொழியாகக் கொண்டபவர்கள், தமிழில் பேசச் சிரமப்படுகிறார்களோ என நீங்கள் நினைத்தால், அது தவறு. இருவருமே தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ் மண்ணின் புதல்விகள் பாடகி அனுராதா ஸ்ரீராம் மற்றும் பாடகி மதுமிதா.


    இதில் பாடகி அனுராதா ஸ்ரீராம்தான் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர். ஒவ்வொரு அங்கத்தினதும் ஆரம்பத்தில் அவர் சொல்வார். 'இப் போட்டி, நாம் அறிந்த பாடல்களின் அழகிய தமிழ் வரிகளை நினைவுபடுத்தச் செய்யும் போட்டி. நடிகர்கள், பாடகர்கள் என நாங்கள் எல்லோரும் அறிந்த பிரபலங்களின் தமிழறிவைச் சோதிக்கும் நிகழ்ச்சி'. ஆனால் உண்மையில் அவரும், போட்டியாளரும் சேர்ந்துகொண்டு  தமிழைச் சோதிக்கிறார்கள். எப்பொழுதாவது ஆங்கில உரையாடலிலிருந்து பாவமாக எட்டிப்பார்க்கிறது தமிழ். உதாரணத்துக்கு மேலே நான் சுட்டியிருக்கும் உரையாடலின் வரிகளைப் பார்க்கலாம். இதில் தமிழ் எங்கே வாழ்கிறது? இதுவே தொடர்ந்தால் தமிழ் எங்கே வாழப் போகிறது? இத்தனைக்கும் பரிசுத் தொகை ஐந்து இலட்சம் இந்திய ரூபாய்கள்.

    தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஒரு தமிழ்ப்பாடகி, ஒரு தமிழ்த் தொலைக்காட்சியில், தமிழை வாழ வைப்பதற்காக நடத்தப்படும் நிகழ்ச்சியில் இந்தளவுக்கு ஆங்கில வார்த்தைகளைக் கொட்டியிருக்கிறார். நிகழ்ச்சித் தொகுப்பாளரும் கூட ஆங்கிலத்திலேயே நிகழ்ச்சியை நடத்துகிறார். எத்தனையோ வேற்றுமொழி நடிகர்கள், பாடகர்கள் தமிழ் திரையுலகுக்கு வந்து, நல்ல தமிழில், உச்சரிப்பிலும் கூட அட்சர சுத்தமாக பேசி, பாடி வரும்போது, தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள் இப்படி தமிழைக் கொல்வது ஏற்கப்படக் கூடியதா? இதே நிகழ்ச்சியில் முன்பு போட்டியாளர்களாகக் கலந்துகொண்ட பாடகர்கள் சத்யன், பிரசன்னா, முகேஷ், நடிகை அபிராமி ஆகியோர் இந்தளவுக்கு ஆங்கில வார்த்தைகள் கலக்காமல், தொகுப்பாளரை விடவும் அழகிய தமிழில்தான் உரையாடினார்கள். நடிகை அபிராமி, நடிகர் கமல்ஹாசனின் கதாநாயகியாக 'விருமாண்டி' உட்பட இன்னும் பல வெற்றிப்படங்களில் நடித்தவர். கடந்த ஆறு ஆண்டுகாலமாக அமெரிக்காவில் கல்வி கற்பவர். ஆங்கிலச் சூழலில் இருந்துவிட்டு வந்த அவரே முழுக்க, முழுக்க தமிழில் பேசி, தமிழில் பாடி வெற்றிப்பணத்தோடு போனதைக் காண முடிந்தது. எனில், நமது ஒரு சில தமிழ் போட்டியாளர்கள் மட்டும் தமிழ் நிகழ்ச்சிகளில் ஆங்கிலத்தைக் காவித் திரிவது ஏன் எனப் புரியவில்லை. அவர்கள் எங்கு வேண்டுமானாலும் உரையாடிக் கொள்ளட்டும். தமிழுக்காக நடத்தப்படும் நிகழ்ச்சியிலுமா இந்தளவு ஆங்கிலம்? இதில் போட்டியின் விதிமுறைகளைத் தெரிவித்த தொகுப்பாளரே ஆங்கிலத்தை விட முடியாமல் அவதிப்படுவதைப் பார்க்கும் போது 'என்ன கொடுமையிது' என்றே எண்ணத் தோன்றுகிறது.

    அதிலும் முத்தாய்ப்பாக பாடகி மதுமிதா, போட்டியிலிருந்து பாதியிலேயே விடைபெறும்போது தமிழுக்காகச் சொன்ன வார்த்தைகள் இவை.

அனுராதா ஸ்ரீராம் : 'Its I think its கொஞ்சம் difficult. So Its a brilliant. I mean very lucky today and also the commitment is there. நீங்க listல இருந்து எந்தப் பாடல்கள் பிடிக்கிறதோ அதையாவது நீங்க வந்து..you know.. ரசிச்சு, உள்வாங்கி, அந்த lyrics எல்லாம் இவ்ளோ தூரம் மனசுல வச்சிருக்கிறது I think ever young expiring playback singer..and we totally enjoyed your show..Congratulations..and Good luck உங்களுடைய future projects எல்லாத்துக்கும் வாழ்த்துக்கள். புதுப்பாடல்கள் release ஆகப்போகுது. We will pray that will be the big hit '

மதுமிதா : 'நான் என்ன சொல்ல விரும்புறேன்னா, ஒரு ஒரு பாடலுக்கும் வரிகள் வந்து ஒரு backbone மாதிரி. So பாடுற எல்லோருமே வந்து நீங்க ஒரு show பாடினாலோ இல்ல try by hearting the lyrics..that only takes ten minuts.அதுவும் நம்மல்லாம் we are from tamilnadu.  நம்மட தமிழ் பாஷையை மதிச்சு நம்மதான் இங்க வந்து அதுக்கு ஒரு மரியாதை கொடுத்து we have to prove that we are from தாய் தமிழ்நாடு'

அனுராதா ஸ்ரீராம் : ' Lovely..can we have lot of applauds for that. Thank you so much Madhu. Can we have the cheque please?'

    நடிகர் வடிவேலு பாணியில் 'முடியல' என்று சொல்லத் தோன்றுகிறதா? இது தான் தமிழ் நிகழ்ச்சி. தமிழை வாழ வைக்கப்போகும் சுத்தமான தமிழ் நிகழ்ச்சி.

    விஜய் தொலைக்காட்சி, தமிழுக்காகப் பல போட்டிகளை அறிமுகப்படுத்தி தமிழ் மொழியை வாழ வைக்க முயற்சித்துக்கொண்டே இருக்கிறது. அதனைப் பாராட்ட வேண்டும். சிறுவர், சிறுமிகளின் 'தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு', 'நீயா நானா?' போன்றவற்றில் அழகிய தமிழைக் கேட்க முடிகிறது. விஜய் தொலைக்காட்சி நிர்வாகிகள் ஒன்று செய்யலாம். இந்த 'பாட்டுப் பாட வா' நிகழ்ச்சியின் ஒரு வாரப் பரிசுத் தொகையை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். அதைக் கொண்டு,  நல்ல தமிழை மட்டுமே பேசி நிகழ்ச்சியைத் தொகுக்கக்கூடிய ஒரு தொகுப்பாளரைத் தேடிப்பிடியுங்கள். அல்லது இந்த நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கும், போட்டியாளர்களுக்கும் கண்டிப்பாக ஆங்கில வார்த்தைகள் கூடாதென்று விதிமுறையைச் சொல்லிவிடுங்கள். தமிழ் வாழும். அது தானாக வாழ்ந்தாலும் பரவாயில்லை. தயவுசெய்து இப்படிக் கொன்று விடாதீர்கள்.

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி - உயிர்மை